சிறு வயது முதலே என் பிரியக் கடவுள். சூலாயுதமும் வேலாயுதமும் இல்லாமல் கொழுக்கட்டையும் கையுமாக இருப்பவர் என்பதால் மட்டுமல்ல, அந்த வயதின் இக்கட்டுகளான ஆசிரியரிடமிருந்தும் பரீட்சையிடமிருந்தும் என்னை அனேகமுறை காப்பாற்றி இருப்பவர் என்பதால்தான். தொப்பையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அவரைப் பார்த்து சிரித்த சந்திரனின் கதையறிந்து முகபாவனையை மாற்றியதுண்டு. வயது ஏற ஏற கடவுள் ஸ்தானத்தில் இருந்து உயர்ந்து நண்பனானவர். அதுதான் அவருடைய தோற்றத்தின் பெருமை. அவருக்குத் தெரியாமல் என் கதையில் எதுவுமில்லை என்று நம்புகிறேன். அவருக்கான எளிய சுலோகம்
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்
வெள்ளைக் கொம்பன்
விநாயகனைத் தொழ
துள்ளியோடும் தொடர் வினைகளே
அப்பம் முப்பழமும் அமுது செய்தருளிய
தொப்பையப்பனை தொழ வினையகழுமே
விரதம், வேண்டுதல் என்று பயப்படுபவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் பிள்ளை மனதுடன் வணங்கினால் இஷ்டதெய்வம் ஆகிவிடுவார். (இஷ்ட தெய்வம் என்றால் நம்முடைய இஷ்டம் அல்ல நம்மிடம் இஷ்டம் வைத்திருப்பவர்.). தெரு முனைகளில், ஆற்றங்கரையில் நமக்கு தரிசன தர தயாராக இருப்பவர், எனவே இவரை தினசரி எளிதாக தரிசனம் செய்யலாம்.
சில அறிவியல் விளக்கங்கள்
1. காதை பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும்போது கையால் பிடிக்கப்படும் இடத்தில் உள்ள முக்கிய நரம்பு தூண்டப்பட்டு மூளைக்கு இரத்தஓட்டம் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி கூடும்.
2. உட்கார்ந்து எழுவது அருமையான உடற்பயிற்சி.
3. பிள்ளையாரின் பிரசாதமாக வழங்கப்படும் எள் கலந்த , எண்ணை சேர்க்காமல் வேக வைக்கப்பட்ட பலகாரங்கள் இதயத்திற்கு நல்லது.
என்றைக்கும் கள்ளமில்லாத மனதை பரிசளிப்பார். வாழ்க்கையின் பாதி பயணம் கடந்த நிலையிலும் அடுத்தவருக்காக சிரிக்கவும் அழவும் என்னால் முடிகிறது என்றால் இவர் அருள்தான் படத்தில் என்னுடைய களிமண் பிள்ளையார். குட்டி பிள்ளையார் என் மைந்தனின் உபயம். வினாயக சதுர்த்திக்கு வந்துவிட்டு மீண்டும் ஆற்றிற்கு சென்றுவிடுவார்.
பெருமை வாய்ந்த பிள்ளையாரின்
ReplyDeleteஅருமையான பதிவு. பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
கருத்துரைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDelete